எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னா பற்றிய தகவல்கள்.
Tuesday, October 29, 2024
எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னா பற்றிய தகவல்கள்.
Wednesday, November 11, 2020
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா எழுதிய 'நட்சத்திரம்' சிறுவர் பாடல்கள் நூல் பற்றிய ஒரு விவரணப் பார்வை - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் கிண்ணியா - 07
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா எழுதிய 'நட்சத்திரம்' சிறுவர் பாடல்கள் நூல் பற்றிய ஒரு விவரணப் பார்வை
இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தடம் பதித்து கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள் மற்றும் மெல்லிசைப் பாடல்கள் என எழுதி இலக்கியத்தில் தனது இருப்பைக் காத்திரமாக்கிக் கொண்டு தொடர்ந்தும் எழுத்துத் துறையில் நிலைத்து நிற்பதோடு, ஏனையவர்களுக்கும் தன்னாலான உதவிகள் செய்து அதன் மூலம் மன நிறைவடைகின்றார்.
இலங்கையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் காலாண்டு கலை இலக்கிய சஞ்சிகையான 'பூங்காவனம்' இவரது பெயரை என்றைக்குமே சொல்லிக் கொண்டிருக்கும். படைப்பாளி வெலிகம ரிம்ஸா முஹம்மதுடன் இணைந்து உடன் பிறவா சகோதரிகளாக, உற்ற நண்பிகளாக வாழ்ந்து பூங்காவனம் உதவி ஆசிரியர் என்ற வரையறைக்குளிருந்து இவர் ஆற்றிய இலக்கியப் பணி மகத்தானது.
எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் இவர், தான் எதிர்கொண்ட பல்வேறு எழுத்துலக சவால்களை அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை என்பவற்றால் வெற்றிகொண்ட ரிஸ்னா இலங்கை கல்வி அமைச்சின் பாட நூல் வெளியீட்டுப் பிரிவில் கணினி வடிவமைப்பாளராக பல வருடங்கள் பணிபுரிந்து, தனது இலக்கிய ஆற்றலின் மூலம் அதற்கு சிறப்பளித்தார்.
எச்.எப். ரிஸ்னா, இதுவரை 10 நூல்களை எழுதி, வெளியிட்டுள்ளார். இவற்றில் இன்னும் உன் குரல் கேட்கிறது, மெல்லிசைத் தூறல்கள் போன்ற நூல்கள், இவருக்கு நாடு தழுவிய ரீதியில் பெரும் வரவேற்பினையும் பிரபல்யத்தினையும் பெற்றுக் கொடுத்தது. இவர் எழுதிய பாடல்களில், நேயர் நெஞ்சங்களைக் கவர்ந்த, "மக்காவில் பிறந்த மாணிக்கமே எம் நபியே" என்ற பாடல் கலைக்கமல் அவர்களால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டமை இங்கு ஈண்று குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பல்வேறு இலக்கிய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் தற்போது சிறுவர் படைப்புகளிலும் தனது கவனத்தைச் செலுத்தி 'நட்சத்திரம்' என்ற சிறுவர் பாடல் நூலை எமக்குத் தந்துள்ளார் ரிஸ்னா. 15 பாடல்கள் அடங்கியிருக்கும் இந்நூல் கல்வி அமைச்சினால் பாடசாலை நூலகங்களுக்குப் பொருத்தமான நூல் என்ற தகுதிச் சான்றிதழையும் பெற்றுள்ளது. இது இவரது எழுத்துப் பணிக்குக் கிடைத்த அரச அங்கீகாரமாகும்.
குறிஞ்சி நிலா எனும் புனைப் பெயரிலும் ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளார் எச்.எப். ரிஸ்னா. தனது படைப்பாற்றலுக்காக இவருக்கு இதுவரை கிடைத்துள்ள விருதுகளாவன:-
• 2013 அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனம் - காவிய பிரதீப விருது (கவிச்சுடர் விருது)
• 2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண சாகித்திய விழா - ஆக்க இலக்கியவாதிக்கான எழுசுடர் விருது
• 2016 ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய கலை இலக்கிய ஆய்வகம் - எழுத்தாளருக்கான கௌரவ விருது
• 2018 பாணந்துறை இஸ்லாமிய பேரவை மற்றும் இலக்கிய வட்டம் - கலையொளி விருது
சிறுவர்களின் வாசிப்புத் திறன் விருத்தியை மேலோங்கச் செய்து, அவர்களது உள மகிழ்வினையும் அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இவர் எழுதியுள்ள இந்நூல் நிச்சயம் பலரது பாராட்டினைப் பெற்றுக் கொள்ளும் என்பது திண்ணம்.
அழகிய அட்டைப் படத்துடன் 28 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்நூலில் 15 பாடல்கள் உள்ளடக்கம் பெற்றிருக்கின்றன. இப்பாடல்கள் ஒவ்வொன்றும் சிறுவர் மனதைக் கவரும் நோக்கில் படைக்கப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் இந்நூல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூலுக்கான அணிந்துரை, பின்னட்டைக் குறிப்பு என்பவற்றை மாவனல்லையைச் சேர்ந்த கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் அவர்கள் வழங்கியுள்ளார்.
இனிப் பாடல்களின் விவரணத்தைப் பார்ப்போம்.
பக்கம் 09, பாடல் - 1
மழை பொழியுது
மழை பொழிகின்ற அழகு ஆறுகள் பெருகி ஓடுவதை காணுகின்ற ஆனந்தம் கார்முகில் பனிந்து நீர் கொட்டிட நீர் நிலைகள் அடைகின்ற நீர்ப்பெருக்கம் என இப்படியே இயற்கையின் அழகு அற்புதமாக சொல்லப்படுதில் சிறுவர்கள் நிச்சயம் இன்புறுவர், சந்தோஷமடைவர்.
மழை பொழியுது பொழியுது
கார்முகில் கொட்டுது கொட்டுது
மழை பொழியுது
கார்முகில் கொட்டுது
அருவிகள் வழிந்திட
ஆனந்தம் பெருகிட
மழை பொழியுது
கார்முகில் கொட்டுது
நீர் நிலை உயர்ந்திட
நிலங்கள் நனைந்திட
பக்கம் 12, பாடல் - 03
பழங்கள்
பழங்கள் உண்பதின் அவசியம் அதனால் பெறப்படுகின்ற ஊட்டச் சத்துக்கள், உடல் ஆரோக்கியத்திற்கு அவற்றின் பங்களிப்பு, கழுவி உண்ணுவதின் சிறப்பு என்பன இப்பாடலில் மிக அழகாக சித்தரித்துக் கூறப்பட்டுள்ளது.
பழங்கள் உண்ணும் பழக்கத்தை
பாலர் நாமும் பழகிடுவோம்
உடல் ஆரோக்கியம் பெற்றிடவே
உண்டுவ ருவோம் பழங்களையே
பழத்தில் உள்ள விற்றின்கள்
விரைவில் உடலில் சேர்ந்திடவே
மென்று உண்போம் பழங்களையே
மெல்ல உண்போம் பழங்களையே
பக்கம் 17, பாடல் - 06
காக்கையாரே
'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' என்ற சிறப்புமிகு பாடல் போல் தமிழ் இலக்கியத்தில் பல்வேறு பாடல்கள், கதைகளில் காகத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் காகத்தின் பங்களிப்பும், காத்திரமான அளவு இருப்பதைப் பலரும் நன்கு அறிவர். அந்தவகையில் எச்.எப். ரிஸ்னாவும் காகம் பற்றிப் பாடுகின்றார்.
காக்கையாரே காக்கையாரே
கருமை நிற காக்கையாரே
கடுமையாக யோசிக்கும்
காரணத்தை சொல்வாயோ?
தெருவோர கடைப் பக்கம்
ஆலமரம் நிற்கிறதே
அதோ பார் அதன் நிழலில்
பாட்டி வடை சுடுகின்றாள்
பக்கம் 27, பாடல் - 14
வயல்வெளி
உலகின் உணவு உற்பத்தித் தளமான வயல்வெளி பற்றியும் அதன் சிறப்புக்கள், மேன்மை பற்றியும் மிக அழகாக தனது பாடல் மூலம் எடுத்துரைத்துள்ளார் இந்த நூலாசிரியை.
ஆற்றங்கரை மேட்டினிலே
அழகழகாய் வயல்களம்மா
அதிகாலை வேளையிலே
அணியணியாய் தெரியுதம்மா
அன்னப் பறவை கூட்டங்கள் போல்
ஆனந்தமாக ஓடி வரும்
கன்னிப் பெண்கள் கூட்டத்திலே
கலர் கலராக ஆடையம்மா
நட்சத்திரம் என்ற இந்த நூலில் இடம் பெற்றுள்ள 15 பாடல்கள் மூலமாகவும் சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தி, அவர்களது கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பினை நல்குவதற்காக எச்.எப். ரிஸ்னா எடுத்துக் கொண்டுள்ள முற்சியில் அவர் வெற்றி கண்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
நூலின் பெயர் - நட்சத்திரம்
நூலாசிரியர் - எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 200 ரூபாய்
தொலைபேசி இல - 0775009222, 0719200580
நூல் விவரணம்:-
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்,
#கிண்ணியா - 07.
03. மழையில் நனையும் மனசு - கே.எஸ். சிவகுமாரன்
எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிதமாய் பேசும் கவினூறு கவிதைகள்
கே.எஸ். சிவகுமாரன்
பதுளை மாகாணத்தில், அந்நகரிலிருந்து சில மைல் தூரத்தில் தியத்தலாவை என்ற குளிர் பிரதேசம் இருக்கிறது. சிறுவயதில் எனது உறவினர் ஒருவர், அங்குள்ள நில அளவைப் பயிற்சியாளர்கள் முகாமில் தங்கியிருந்தார். பாடசாலை விடுமுறையில் என் பெற்றோர், தம்பிமார் சகிதம் நாம் அங்கு சென்றிருந்தோம். அந்த அனுபவம் அலாதியானது. தியத்தலாவையிலிருந்து திறமைசாலி இளம் எழுத்தாளர் ஒருவர் நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறார். பத்து நூல்களை இதுவரை தந்துள்ள அவர் பெயர் எச்.எப். ரிஸ்னா. இவருடைய முன்னைய நூலொன்றை நான் திறனாய்வு செய்தது நினைவிற்கு வந்தது.இவரது சமீபத்திய நூல், ஒரு கவிதை நூல். மழைப் பிரதேசமான அவ்விடத்திலிருந்து எழுதும் ரிஸ்னா "மழையில் நனையும் மனசு" என்ற தலைப்பில் அந்த நூல் வெளியாக்கியிருக்கிறார். "மழைக் குளிரில் தளிர் பறிக்கும் மலையக மாதருக்கு" சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்த அழகான நூலில் மொத்தம் 78 கவிதைகள் இடம் பெறுகின்றன.
இந்நூல் வெளியிடப்பட்டபோது அங்கு பேசிய அறிஞர்கள் இந்நூலின் சிறப்புகளை விதந்துரைத்தனர். அவை நூலாசிரியருக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். இவரது இக்கவிதைகளின் உள்ளடக்கம் தொடர்பாகவே பலரும் தமது கருத்துக்களை மையமாக வைத்துப் பேசினர். என்னைப் பொறுத்தமட்டில் உள்ளடக்கம் தொடர்பாக நம்மிடையே பலர் வியாக்கியானங்களைச் செய்ய இருக்கின்றனர். எனவே தான், உள்ளடக்கம் ஆசிரியரின் சொந்தப் பார்வையானதால், அதுபற்றி நான் தட்டிக் கேட்பதில்லை. நான் முதலில் ஒரு ரசிகன் மாத்திரமே. கண்டனம் செய்யும் விமர்சகன் அல்லன். மாறாக, படைப்பின் திறன்களை எனது ரசனையின் அடிப்படையில் சுட்டிக்காட்டுவதே எனது தொழிற்பாடு. அதன்படி ரிஸ்னாவின் கவிதைகளில் காணப்படும் புத்தாக்கங்களையும், கவித்துவம் நிரம்பிய வரிகளையும் வியந்து பாராட்டவே முயல்கின்றேன்.
கல்கிசையிலிருந்து வெளியாகும். "பூங்காவனம்" சிற்றேட்டினரின் இலக்கிய வட்டம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ 400/=. இதில் சில கவிதைகளுக்கு மனதைக் கவரும் சில சித்திரங்களும் இடம்பெற்றுள்ளது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன், நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், எம்.எஸ்.எம். ஜின்னா, வி. ஜீவகுமாரன் ஆகியோருடன் எச்.எப். ரிஸ்னாவும், இக்கவிதைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அழகாக விபரித்துள்ளனர். இவற்றை நான் மீண்டும் எடுத்துரைப்பதை விடுத்து, கவிதைகளில் காணப்படும் புதுமைப் பிரயோகங்களை மாத்திரம் இங்கு பதிவு செய்கிறேன்.
அதற்கு முன்னர், இவருடையதும், இவரின் ஊக்குவிப்பியாக இயங்கும் ரிம்ஸா முஹம்மத்தினதுமான இரு கவிதைகளை நான் ஆங்கிலத்தில் ஆக்கம் செய்துள்ளேன் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
ரிஸ்னாவின் நோக்கம்: அழகான கவிதையை எழுதிவிட நல்ல கற்பனை வளம் இருந்தால் போதும். ஆனால் ஆத்மார்த்தமான கவிதைகளை எழுதுவதற்கு நமதோ, நம்மைச் சார்ந்தவர்களின் வலிகளும் போராட்டங்களும் தான் பாடு பொருளாகின்றன. அழகியல், ஆத்மார்த்தம் ஆகிய இருவகை சார்ந்த கவிதைகள் இந்நூலில் உள்ளடங்கியிருக்கின்றன.
இனி, நான் ரசித்த வரிகளுள் சில:-
* மலைகள் பெயர்ந்து இடம்மாறி மண்சரிவாகி நின்றதம்மா
* அதிகாலை வந்து என் மனசில சங்கமமான பனித்துளிக்கு
* உள்ளத்தின் உறுத்தல்கள் என்ற கவிதை அழகிய காதற் கவிதை
* இரும்புருக்கி ஊற்றியது போல இதயத்தில் வலியெடுக்கிறது
* வாடிப்போன என் இளமையே
* நெருப்புக் கட்டைக்குள் ஓடிப் புகுந்து தீக்குளிக்கும் என் இளமை
* குளிர் பூசும் கால நிலை
* கலாய்த்த உறவுகள்
* கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி
* வார்த்தைகளால் கத்தி செய்து துன்புறுத்துபவன் இருக்கிறான்
* உன் வார்த்தைகளின் சுனாமியினால்
* இனமொன்றை துடைத்தழித்தால் அதற்குப் பெயர் வன்மம் தான்
* பூச்சரித்த அரிசி தின்று வயிற்றுளைவால் துடித்திருந்தோம்
* இதயத் தணலில் மேலெழும் சில நினைவுப் புகை என்னில் படிந்து கொள்கிறது
* கற்கண்டை சாப்பிட்டாற் போல காதல் சொற்கொண்டு நீ பேசுகையில் ஆனந்த அருவி வந்து பாய்கிறது என் உள்ளத்தில்
* என் ஞாபகப் புற்களில் அமர்ந்து கொண்ட பனித்துளியா அவன்
* இதயத்தின் கீதங்களை மொழிபெயர்ப்பு செய்த வீணையா அவன்
* என் மனசை மெதுவாய் கொத்தும் கோழிக் குஞ்சா அவன்
* அடை மழையில் வரைந்த ரங்கோலியாகத் தான் அது
* நேசத்தின் ஒலிகள்
* குளவி கொட்டிப்போன வேதனையின் சாயலிலும் பாலைவன மணலின் தாங்கவியலா கொதிப்பிலும் துயரங்களை தருவிக்கிறது இருதயம்
* ஐஸ்கிறீம் கூட வெந்நீராய் சுட்டது
* சிற்பமாய் நீ எனக்குள்
* காய்ந்திருந்த இதயத்தில் மழை தூறிப் போயிற்று
* உப்பு அதிகரித்த உணவுக்குள் உடனே நீர்விட்டு அருந்திய பாசம்
* நெருப்புக்கு நாமின்று விறகானோம்
* உன் மனமெனும் மீனை கௌவிக் கொள்வதற்காய் நதிக்கரை கொக்காக நானும்
* மரக்கொத்தியாய் நீ என்னை கொத்திவிட வேண்டும் என்பதற்காய் என் உள்ளத்தை வாழை மரமாய் ஆக்கியிருக்கின்றேன்
* உன் இறால் இதழை உடனே பத்திரப்படுத்து
எச்.எப். ரிஸ்னா கவிஞர் மாத்திரமல்லர். நல்ல திறனாய்வாளரும் கூட. மேலும் பல காத்திரமான தொகுதிகளை இலக்கிய உலகுக்கு இவர் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துக்கள்!!!
நூல் - மழையில் நனையும் மனசு
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் பதிப்பகம்
விலை - 400 ரூபாய்
02. "மழையில் நனையும் மனசு" கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
"மழையில் நனையும் மனசு" கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
ஷஷமழையில் நனையும் மனசு|| என்ற கவிதைத் தொகுதி ரிஸ்னாவின் 10 ஆவது நூலாகும். 78 கவிதைகளை உள்ளடக்கியதாக 120 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலை பூங்காவனம் இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்), மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) ஆகிய நூல்களை ஏற்கனவே இவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"மழையில் நனையும் மனசு" என்ற கவிதைத் தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் "ஊவாவின் கவிதை இலக்கிய வரலாற்றில் ரிஸ்னாவுடைய கவிதைகளும் நிச்சயம் ஆராயப்படும். இளம் வயதிலேயே இலக்கியத் துறையில் இந்நூலாசிரியர் பல பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கைநெறியை நிறைவு செய்துள்ள இவர் பல இலக்கிய அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகித்து வருகின்றார். ஒரு சிறந்த கவிஞன் என்பவன் தக்க சொல்லை, தக்க இடத்தில், தக்கவாறு கையாள்பவன் என்றும் - சிறந்த கவிதை என்பது நல்ல சொற்கள், நல்ல ஒழுங்கில் அமைவது என்றும் கொள்ளலாம். இக்கவிஞரின் கவிதைகளில் இப்பண்புகளைத் தொடர்ந்து காணலாம் என்பதற்கு 78 இற்கும் மேற்பட்ட கவிதைகளில் பல உதாரணங்களை அவதானிக்க முடிகின்றது. கவிதைக்காகக் கற்பனையில் ஆழ்ந்துவிடாமல் தன்னைச் சூழ உள்ள சமூகம், அதில் வாழும் மனிதர்கள்.. இவற்றையே பொருளாகக் கொண்டு தனது கவிதா ஆற்றலைச் சிறப்புறக் காட்டியுள்ள நூலாசிரியரின் இந்நூல், சகல தமிழ் பேசும் மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் நிச்சயம் பெறும்." என்று கூறியுள்ளார்.
அதுபோல இந்த நூலுக்கு நயவுரை வழங்கியுள்ள முன்னாள் அரசாங்க தகவல் திணைக்கள தகவல் அதிகாரியான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "இலக்கியத் தடத்தில் கால்பதித்து அதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் இளையவர்களில் முக்கியமான ஒருவராகவே தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவை நான் பார்க்கிறேன். ஒருசில கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு ஓய்ந்து போவோர்களாய் பல இளையவர்கள் இருக்கையிலே தான் சார்ந்த இலக்கியத் துறையில் ஒரு திடமான தடத்தைப் பதிக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் நிறையவே காணப்படுவதை நான் அறிவேன். இலக்கியத் துறையிலுள்ள மூத்தோருடன் அவருக்கு இருக்கும் தொடர்பு, அவர்களை அணுகும் முறை என்பனவுடன், இளையவர்களுடன் இருக்கும் சுமுக உறவு போன்றன இத்துறையில் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்வுடனும் ரிஸ்னாவை ஈடுபட வைக்கிறது என்று சொன்னால் அது பிழையல்ல. ஏறக்குறைய இலங்கையின் எல்லா பத்திரிகை, சஞ்சிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் தனது பதிவினைச் செய்துள்ள எச்.எப். ரிஸ்னா, கடல் கடந்தும் தன்னை நிலைப்படுத்தியுள்ளார். அவருக்கென்றே பல பிரத்தியேக அழகான வலைப்பதிவுகள் சர்வதேசமெங்கும் அவரை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவரிடமிருக்கும் தேடல் முயற்சிகள் அவரை பண்படுத்திக் கொண்டிருக்கின்றன."
கருத்துரை வழங்கியுள்ள சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா அவர்கள் "எழுத்துக்களால் சமூகத்தை திருத்திவிட முடியும் என்று நம்புகிறவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறார்கள். எழுத்தின் சமூக பயன்பாடு பற்றி நிறைய வாதப் பிரதிவாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னா உன்னதமான நோக்கங்கள் நிறைந்தவராகக் காணக்கூடியதாய் உள்ளார். இவரது உறைப்பான வார்த்தைககள், உபதேசங்கள், போதனை கல்வி போன்றன நிச்சயம் சமுதாயத் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றன. நெருப்பு வாழ்க்கை, இதயமும் பழஞ்செருப்பும், பெரிய புள்ள, போலி மனிதர்கள், சீதனம் தின்னும் கழுகுகள், ஏழைத் தாய் போன்ற கவிதைகளில் பொதிந்துள்ள கருத்துச் செறிந்த அவரது உன்னத எழுத்துக்கள் இந்த எதிர்பார்ப்பிற்கு வலு சேர்க்கிறது எனலாம்"| என்று ரிஸ்னாவின் கவிதைகள் பற்றி சிலாகித்துள்ளார்.
'மழைக் குளிரில் தளிர் பறிக்கு;கும் மலையக மாதருக்கு இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். இந்த நூலில் உள்ள 78 கவிதைகளில் சில கவிதைகளை எடுத்து நோக்குவோம்.
சீற்றம் (பக்கம் 21) என்ற கவிதை வெள்ள அனர்த்தத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. அத்துடன் அந்த அனர்த்தம் மனிதனுக்குப் புகட்டக்கூடிய பாடங்களையும் இக்கவிதை கற்பிக்கின்றது. எமனைப் போல மழை பெய்து அதனால் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் அழிந்துவிட்டதாகக் கூறும் நூலாசிரியர் அவ்வாறு அனர்த்தம் ஏற்பட்ட வீடுகளுக்குள் சென்று திருடுவோரையும் இக்கவிதையில் சாடியிருப்பது அவ்வாறு நடப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் அமைந்துள்ளது.
கொல்லும் எமனாய் வானவெளி
துன்ப மழையைப் பொழிந்ததம்மா
சேர்த்து வைத்த சொத்தெல்லாம்
பார்த்திருக்க அழிந்ததம்மா!
வெள்ளம் என்ற சொல் கேட்டு
உள்ளம் தீயாய் எரிந்ததம்மா
கனவில் பூக்கும் தோட்டத்தில்
கல்லறை மட்டும் தெரிந்ததம்மா!
கூரை வரையும் நீர் வந்து
பதறச் செய்து வதைத்ததம்மா
ஓடி ஒழிய வழிகளின்றி
பின்னால் வந்து உதைத்ததம்மா!
எனது ஊரும் தலைநகரும் (பக்கம் 43) கவிதை சொந்த ஊரின் சிறப்புகளை எடுத்துக்காட்டுவதோடு, தலைநகரில் செயற்கை வாழ்க்கை வாழுகின்ற மனக்கிலேசத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. சொந்த ஊரிலிருந்து வருபவர்களுக்கு தலைநகரம் அபயமளித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றதென்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல மன வாட்டத்தைக் கொடுப்பதும் உண்மையே. காரணம் வீட்டைவிட்டு தொழிலுக்காக, படிப்புக்காக என்று தலைநகரில் வெந்தேறு குடிகள்தான் அதிகம். அவ்வாறு காலச்ச சக்கரத்தின் காய் நகர்த்தலுக்கு ஆட்பட்டு வந்தவர்களின் மனவோட்டத்தை, ஊர் பற்றிய பிரக்ஞையை இக்கவிதை மூலம் நன்கு உணரலாம்.
அங்கு...
நான் ஓடித் திரிந்த மேட்டுநிலம்..
குளிர் பூசும் காலநிலை..
பசுமைமிகு பச்சை மரம்..
அண்ணார்ந்து பார்க்க குன்றுகள்!
மொட்டை மாடியமர்ந்து
கிறுக்கிய கவிதை..
மரத்தடி நிழலின் ஈரலிப்பு..
பலாப் பழத்தின் வாசனை..
என் சமையலை ருசித்தவாறே
கலாய்த்த உறவுகள்..
அன்பின் உம்மா வாப்பா..
செல்லத் தங்கை.. சுட்டித் தம்பி!!!
இங்கு...
சுட்டெரிக்கும் சூரியன்..
பச்சையம் மறந்த பொட்டல் வெளி..
ஜீவிதம் கசக்கும் விடியல்கள்..
வாகனங்களின் தொடர் இரைச்சல்!
மூடியே கிடக்கும் ஜன்னல்கள்..
கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி..
நெருப்பு விலையாய் சாமான்கள்..
சுனாமி தந்த கடல் அல்லது கரை
செயற்கை சிரிப்புமற்ற மனித உயிர்கள்!!!
லயத்து வீடும் கரத்தை மாடும் (பக்கம் 66) என்ற கவிதை காலாகாலமாக மலையக மக்கள் படுகின்ற துயரத்தை பிரதிபலிக்கின்றது. கொழுந்து பறிக்கும் தொழிலைச் செய்பவர்கள் மழை வெயில் பாராது, கஷ்டப்படுகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு 'லயத்துக் காம்பறா' என்று சொல்லப்படும் சிறு அறையில் காலங்காலமாக பல தலைமுறைகள் வாழ்ந்து வருகின்றார்கள். வாக்குகள் கேட்டு காலடி தேடிப் போகும் அரசியல்வாதிகள் கூட, அம்மக்களின் பிரச்சிகைளைத் தீர்த்து வைக்கப் பாடுபடுவதில்லை. ரொட்டியும் சம்பலும், தேயிலைச் சாயமும்தான் அவர்களது உணவு. இந்த அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கையை இக்கவிதை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றமை சிறப்பும்சமாகும்.
கொழுந்த நாம பறிச்சு பறிச்சே
கையி காலு முறிஞ்சி போச்சி
தேங்கா மாவு குதிர வெல
ஒழக்கிறதும் எரிச்சலாச்சு!
சப்பாத்து இன்றி போனதால
புள்ள படிப்பு பாழாப் போச்சி
பட்டணம் போன மூத்தவனின்
சம்பளமும் கொறஞ்சி போச்சி!
மானியம், கடனுதவி
அர்த்தமெல்லாம் பிழச்சிப் போச்சி
வாழையடி வாழையாக
கஷ்டங்களே நிலைச்சிப் போச்சி!
நம்பிப் போட்டோம் வாக்குகள
எல்லாமே மோசம் போச்சி
தொரேமாரின் வேஷம் எல்லாம்
நல்லாவே வெளுத்துப் போச்சி!
லயத்து வீடும் கரத்தை மாடும்
எங்களுடைய சொத்தாப் போச்சி
மாடி வீடும், மஹத்தியா பட்டமும்
அவங்களோட நெலச்சிப் போச்சி!
குடிக்கலாம்னு பாத்தோமே
கொஞ்சமாவது கஞ்சி வச்சி
கூரை ஓட்டை தண்ணி வந்து
அடுப்பும் இங்கு நூந்து போச்சி!!!
இளம் தலைமுறை எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராக எச்.எப். ரிஸ்னாவைச் சொல்லலலாம். இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிளும் காலூன்றி வெற்றி பெறக்கூடிய திறமை இவருக்கு நிறையவே இருக்கின்றது. இவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது. சந்தக் கவிதைகளில் மனம் லயிக்கச் செய்யும் எழுத்தாற்றல் கைவரப் பெற்ற இவரது இலக்கியப் பணி தொடர்ந்தும் சிறப்பாக இடம்பெற வாழ்த்துகிறேன்!!!
நூல் - மழையில் நனையும் மனசு
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222, 0719200580
மின்னஞ்சல் முகவரி - riznahalal@gmail.com
விலை - 400 ரூபாய்
Saturday, February 16, 2019
01. ''மழையில் நனையும் மனசு'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம் - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா – 07
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா – 07
இலங்கையின் இலக்கிய வரலாற்றில் தற்போது முன்னொரு போதும் இல்லாத அளவில் பெண் படைப்பாளிகளின் வரவு அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், ஊடகம் என இவர்களது ஆளுமை பரந்துபட்டு செல்வதைக் காணுகையில் மனசுக்குள் ஒரு மழைத் தூறல் பொழிந்து கொண்டிருக்கின்றது.பரந்து விரிந்து நிற்கும் இலக்கிய உலகு இவர்களது வரவினால் மகிழ்ச்சிப் பூக்களைப் புஷ்பித்து சந்தோஷம் அடைவதோடு அவர்களுக்காக தன் மடியில் இடமும் கொடுத்து கௌரவப்படுத்துவதில் புதிய அத்தியாயங்கள் தோற்றம் பெற வழிவகுக்கின்றன.
எண்ணக் கருக்களுக்கு இலக்கிய வடிவம் கொடுப்பதில் ஆர்வம் கொண்டு அயராது உழைத்து நிற்கும் பெண் படைப்பாளிகளின் வரிசையில் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா மிக முக்கியமான இடத்தினை வகிக்கிறார். கல்வி வெளியீட்டுத் திணைக்கள்ததில் பணியாற்றும் இவர் கவிஞர், பாடலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர், சிறுவர் இலக்கியர், ஊடகவியலாளர் என பன்முக ஆளமைகளைக் கொண்டுள்ளார். தனது திறமையின் நிமித்தம் கிராமிய, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். அவரது இலக்கிய இலக்கினை நோக்கிய பயணத்தில் கனிசமான வெற்றியும் அடைந்துள்ள இவர் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளதுடன் பூங்காவணம் சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும் இருந்து ஆற்றுகின்ற இலக்கிய பணி மகத்தானதாகும். இவ்வாறான சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டுள்ள எச்.எப். ரிஸ்னா, ''மழையில் நனையும் மனசு'' எனும் நாமம் தாங்கிய கவிதை நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். கண் கவரும் அழகிய அட்டைப் படத்துடன் கூடிய கைக்கடக்கமான இந்நூல் 78 கவிதைகளை உள்ளடக்கி 120 பக்கங்களில் பூங்காவனம் இலக்கிய வட்ட வெளியீடாக வெளிவந்துள்ளது.
இந்நூலுக்கு பேராசிரியர் சோ. சந்திரசேகரன் (ஓய்வுநிலை) அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். அவர் தனது உரையில் ''சிறப்பு வாய்ந்த கவிதை அடிகளை இனங்கண்டு இவ்விடத்தில் பட்டியல் இடுவதைவிட வாசகர்களே அவற்றை இனங்காண வேண்டும் என்பது எனது வேண்டுகோள். கவிதையின் உருவமா, உள்ளடக்கமா முக்கியத்துவம் வாய்ந்தது? என்ற வினாவானது நீண்ட காலமாக இருந்து வருகின்றது. கவிஞன் பாடும் பொருளினாலன்றி வகையினாலேயே சிறப்புப் பெறுகின்றான் என்று உருவத்தைப் பெரிதும் மதிப்போர் உள்ளனர். அவ்வாறே உள்ளடக்கத்தின் சிறப்புப் பற்றி பேசுவோரும் உள்ளனர். இக்கவிதை நூலில் கவிதாயினி எச்.எப். ரிஸ்னா இவ்விரு சிறப்புகளுக்கும் சமனான முக்கியத்துவம் வழங்கியுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளது நூலின் சிறப்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
மேலும் நயவுரையை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் மிக அழகாக நயம்பட நவின்றுள்ளதோடு பின்னட்டைக் குறிப்பினை இலங்கையின் காத்திரமான பெண் படைப்பாளியும், பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியையுமான வெலிகம ரிம்ஸா முஹம்மத் வழங்கியுள்ளார். இவர் ரிஸ்னா பற்றிக் குறிப்பிடுகையில் ஷஷகவிதாயினி எச்.எப். ரிஸ்னா இலங்கை இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான பெண் படைப்பாளியாவார்|| எனக் குறிப்பிட்டுள்ளார்.
கவிதைகளின் உள்ளடக்கங்களைப் பார்க்கின்ற போது காதல், சோகம், பெண்ணியம், சமூகவியல், சர்வதேசம் என பரந்துபட்டுச் செல்வது மட்டுமன்றி எழுத்துக்களின் மூலம் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கம் இவரது கவிதைகளில் நிறையக் காணப்படுவதால் இந்நூல் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
''பெரிய புள்ள'' (பக்கம் 27) எனும் கவிதையில் சிறு வயது ஞாபகங்களை மீட்டிச் செல்கின்றார். பசுமையான நினைவுகள் காலம் கடந்தும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்திருக்கும். இக்கவிதையை வாசிக்கும் வாசகனும் தன் பால்ய வயது ஞாபகங்களை அசைபோட்டுப் பார்ப்பான் என்பது நிச்சயம்.
கெணத்தடியில்
தேப்ப குட்டியும்
புல்லு வெலக்கி
பெத்தாவும் பிடிச்சது..
பேரக்கா வித்த காசில
பால்டொபி சாப்பிட்டது..
போறவார பஸ்ஸூக்கெல்லாம்
'கெட்டம்பொல்'
அடிச்சி மாட்டியது..
பிரேமய்யா கடயில கெழங்கெடுத்து..
அடுத்த தோட்டத்துல விறகொடித்து
கட வச்சி வெளயான்டது..
மலையக மக்களின் துயரம் வார்த்தைகளுக்கும் வடிக்க இயலாதது. பரம்பரை பரம்பரையாக கொழுந்து பறித்து ஜீவிக்கும் அவர்களின் உழைப்பு நாட்டின் அந்நிய செலாவணியில் அதிக தாக்கம் செலுத்துவதாகும். மழை, வெயில் பாராமல், அட்டை கடியிலிருந்து மீளாமல் தேயிலை பறிக்கும் அம்மக்களின் துயர் சூழ்ந்த வாழ்க்கை ''மலை நாட்டிலும் சுனாமிங்க'' (பக்கம் 31) என்ற இக்கவிதையினூடே நன்கு தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
தேகத்தை வருத்தி
தேயில பறித்தாலும் அதற்குரிய
பாகத்தை கேட்கையில
பலி பாவம் எமக்காகும்!
மாவு வெல அரிசி வெல
எகிறிக்கிட்டே போவுதுங்க..
காவு கொள்ளும் வறுமையை
எதிர்த்திடுதல் எப்படிங்க?
''சிறகொடிந்த பறவையின் பாடல்'' (பக்கம் 51) எனும் கவிதை குறியீட்டுக் கவிதையாக எழுதப்பட்டிருக்கும் பாங்கு சிறப்பானது. துயரத்தை வெளிப்படுத்தும் உத்திகளில் படிமங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. ஷஎதுவுமே இல்லை| என்று கூறாமல் ஷகைகளை வெறுமை அணைக்கிறது| என்ற வரிகளினூடே கவிஞரின் நேர்மறை எண்ணம் வெளிப்படும் பாங்கு ரசிக்கத்தக்கது
காலை நேர நிலவாய்
என் வாழ் நாள் கழிகிறது
ஐயறிவு ஜீவன் கொண்ட
உரிமை கூட இன்றி நான்
என் தலை தன்னில் அரைக்கப்படும்
மிளகாயின் காரங்கள்
மகா கொடுமை!
என் நெஞ்சாங்கூட்டுக்குள்
தடவித் தடவி
எதையோ தேடுகிறேன்..
என் கைகளை
அணைப்பதென்னவோ
வெறுமைதான்!!!
''உடன்பாடுகள்'' (பக்கம் 63) எனும் கவிதை காதலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. எதிர்காலக் கனவுகளில் லயித்திருக்கும் காதலியின் வண்ணக் கனவுகளாய் இக்கவிதை எழுதப்பட்டுள்ளது.
நான் உன்னுடையவளாய்ப் போகும்
நாளை எண்ணியே
இதயம் பலமிழந்து விட்டது
வருடங்கள் காத்திருக்க
தெரிந்த எனக்கு
நாளிகைகளை சமாளிப்பது
காயங்கள் தோறும்
உப்பால் கழுவுவதைப் போலிருக்கிறது!
மொத்தத்தில் மிகச் சிறந்த கவிதைகளின் உள்ளடக்கமாக இந்நூல் விளங்குகிறது. அநேக கவிதைகள் படிப்பினை தரும் கவிதைகளாகக் காணப்படுவதுடன் அழகியல் கவிதைகளும் இத்தொகுதியில் காணப்படுவது சிறப்பம்சமாகும். கவிதாயினி எச்.எப். ரிஸ்னா தனது கவி உலகப் பாதையில் வெற்றி பெற்றுள்ளார் என்று துணிந்து கூறலாம். அவருக்கு நல் வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர் - மழையில் நனையும் மனசு
வகை - கவிதை
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 400 ரூபாய்
Sunday, December 4, 2016
02. எச்.எப். ரிஸ்னா அவர்களின் 'மெல்லிசை தூறல்கள்' - தலவாக்கலை ராஜ் சுகா (த. எலிசபெத்)
தலவாக்கலை ராஜ் சுகா (த. எலிசபெத்)
இசையில் மயங்காத இதயமுண்டாவென்றால் இல்லையென்று கூறுமளவுக்கு நாம் இசையோடு பின்னிப்பிணைந்து வாழ்தல் பணி செய்கின்றோம். அதிலும் மெல்லிசை கீதங்களில் ஊடுருவி இதயம் மகிழாதார் எவருமிலர்.
எம்மை கவர்ந்த பாடல்களின் வரிகளை நாம் சுவைத்து அசைபோட்டு அநுபவிக்கும் சுகத்தினை பொதுவாக நம்மில் அனைவருமே பெற்றிருப்பதோடு காதல் வரிகள் எல்லா தரப்பினரையும் ஒருகணம் தட்டிப்பார்த்தே செல்லும்.
கவிதை சிறுகதை விமர்சனம் சிறுவர் இலக்கியமென பல தளங்களில் வெற்றிவாகை சூடிய கவிதாயினி எச்.எப். ரிஸ்னா அவர்கள் சிறந்த பாடலாசிரியராக வெளிப்பட்டுள்ளமை வியக்கச்செய்கின்றது.
'மெல்லிசை தூறல்கள்" என்ற பாடல் நூல் மூலமாக மேற்கூறிய இதய சுகங்களை எம் சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவ்விளம் படைப்பாளியை முதலில் பாராட்டியே ஆகவேண்டும். ஏலவே எட்டு நூல்களை பிரசவித்த இவர், தனது 9வது நூலை வித்தியாசமான ஓர் திறமையின் மூலத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக எந்த ஒரு பாடலாசிரியரும் இசையை உள்வாங்கிய பின்னரே வரிகளமைக்கும் வழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். ஆனால் ரிஸ்னா அவர்கள் தன் இதயத்தில் சுழலும் இசை ஞானத்தைக்கொண்டும் கவிப்புலமையினைக் கொண்டும் பாடலாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.
சமூகம் காதலென சகல பக்கங்களையும் தொட்டுக்காட்டும் வரிகளில் சுவையமுது வழிந்தோடுகின்றது. 36 பாடல்களில் "பாதைகள் புதிது" எனும் பாடல் இசையமைப்பாளரும் பாடகருமான ஜனாப் டோனி ஹசன் அவர்களால் 2011ல் இசையமைத்து ஹஜ் பெருநாளன்று பாடப்பட்டுள்ளது . "மக்காவில் பிறந்த மாணிக்கமே" எனும் பாடல் பாடகரும் இசையமைப்பாளருமான கலைக்கமால் அவர்களால் 2014ல் இசையமைத்து பாடப்பட்டது. இதுபோல இவரது அனைத்து பாடல்களும் இசைவடிவம் பெற்று ரசிகர்களை நனைக்க வேண்டுமென்பது எனது பிரார்த்தனை.
'அன்பை அள்ளிப் பொழியும்' என்ற முதல் பாடல் வரிகளில் அல்லாவை வாழ்த்தும் வரிகளாகவும் அதன்பின்னால் அனைத்தையும் அலசும் பாடல்களாகவும் அமைந்திருக்கின்றன.
"அனைத்தும் பயில மனமிருந்தால்
அகிலம் உனக்கு ஏணிதரும்
அறிவால் வெல்லும் பலமிருந்தால்
அரிவாள் நாணிவிடும்'
இளம் சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுக்கும் இவரின் பல கவிதைகள் பிரயோசனம் நிறைந்த கருத்துக்களாக, சமூக அக்கறை சமூக நேசன் கொண்ட இவரின் உள்ளக்கிடக்கைகள் சமூகத்துக்கு அதிகம் கடமைப்பட்டதாக வெளிப்படுகின்றது. தன் எழுத்துக்களால் அக்கடமையினை செவ்வனே செய்துமுடித்திருக்கின்றார்.
இந்திய பாடல்களின் மாயைக்குள் மூழ்கிப்போயிருக்கும் இலங்கையின் ரசனைக்கண்கள் சும்மாவேனும் எம் படைப்புக்களை திரும்பிப் பார்க்காதிருப்பது வேதனைதான். இதனை நூலாசிரியரும் தனதுரையில் கூறியுள்ளார். இந்திய பாடல்களுக்கு எவ்வகையிலும் தரத்திலும் சரி கனதியிலும் சரி குறைவுபடாமல் ரசனைப்பார்வைக்கு விருந்தாக அமைந்துள்ள இந்நூலின் பாடல்கள் அனைத்தும் இசையமைத்து பாடப்படுமாயின் இசைப்பிரியர்களுக்கு சிறந்த வரமாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. இலங்கையின் இசையமைப்பாளர்களே இது உங்கள் கடமைகளிலும் ஒன்றே என்பதனையும் இவ்விடத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்
இவரின் அனைத்து இலக்கிய பணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் பல வெற்றிப்படிகளை எட்டவேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு நிறைவுசெய்கின்றேன்.
நூலின் வகை:- பாடல் தொகுப்பு
நூலின் பெயர்:- மெல்லிசைத் தூறல்கள்
நூலாசிரியர்:- எச்.எப்.ரிஸ்னா
விலை:- 300/=
தொடர்புகளுக்கு:- 0775009222, 0719200580
01. மெல்லிசைத் தூறல்கள் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட எச்.எப். ரிஸ்னா எழுதிய மெல்லிசைத் தூறல்கள் என்ற பாடல்களடங்கிய நூல், கொடகே பதிப்பகத்தினால் 36 அழகிய பாடல்களை உள்ளடக்கியதாக 88 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இந்த நூல் மூலம் அவர் பாடலாசிரியராக புதுப் பிறவி எடுத்திருக்கின்றார்.இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை), திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்) ஆகிய 08 நூல்களை ஏற்கனவே ரிஸ்னா வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாகும். கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், இதழியல் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியராவார்.
மெல்லிசைத் தூறல்கள் நூலுக்கான பிற்குறிப்பை வழங்கியுள்ள கவிஞர், திரைப்பட நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் ``கவிதாயினி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களது இனிய பாடல்களை மகிழ்ச்சியுடன் ஆங்காங்கு மனசுக்குள் பாடிப் பார்த்து ரசித்தபடி வாசித்தேன். இந்தப் பாடல் தொகுதியில் ஆன்மீகப் பாடல்களும், குடும்ப உறவுகள் பற்றிய பாடல்களும், ஈரம் சொட்டும் காதல் பாடல்களும், நன்நெறிப் பாடல்களும் நிறைந்துள்ளன. இவரது பாடல்களில் தன்னுணர்வு கவிதை மொழி தூக்கலாக இருப்பது போற்றத்தக்க சிறப்பு'' என்று சிலாகித்து குறிப்பிட்டுள்ளார்.
இதே போல நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள் ``மெல்லிசை இயல்பாகவே எவரையும் கவரக்கூடியது. இதுவே பல்வேறு பக்திப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள், சமுதாய எழுச்சிப் பாடல்கள், அரசியல் பிரசாரப் பாடல்கள் முதலியவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. இலங்கையில் 1970கள் முதலாக மெல்லிசைப் பாடல்கள் பெரும் வளர்ச்சி பெறத் தொடங்கின. இத்தகைய வளர்ச்சிக்கு இலங்கை வானொலி ஒரு முக்கிய களமாக விளங்கியது. அது வழங்கிய ஊக்கத்தின் மூலம் ஏராளமான கவிஞர்களின் மெல்லிசைப் பாடல்கள் (எனது உட்பட) இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின. தற்போது மெல்லிசைப் பாடல்கள் தொடர்பில் பெரும் உற்சாகத்தை இலங்கை வானொலியில் காண முடியாவிடினும், ஒருகாலத்தில் அதன் பங்களிப்பு உச்சநிலையில் இருந்தது. எவ்வாறாயினும், இலங்கையில் மெல்லிசைப் பாடல் வளர்ச்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வகையில், இத்துறை தொடர்பாக தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இலக்கியத் துறையில் இளம் படைப்பாளியான ரிஸ்னா குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார்.
மெல்லிசைத் தூறல்கள் என்னும் இந்த நூல், மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பாக விளங்குகிறது. இத்தொகுதியில் 36 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு நோக்குகளையும், போக்குகளையும் கொண்டவையாக அவை விளங்குகின்றன. ஆன்மீகம், சமுதாய விமர்சனம், இலங்கையின் இன ஒற்றுமை, காதல், அறிவுரை, தனிமனித உணர்வுகள் முதலான பல்வேறு விடயங்கள் இப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் கணிசமானவை அகநிலை உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாக உள்ளன'' என்கின்றார்.
மெல்லிசைத் தூறல்கள் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள கண்டி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி ரதி தேவ சுந்தரம் அவர்கள் ``உலகின் எல்லா மொழி வடிவங்களிலும் மிகப் பழமையானது கவிதை (செய்யுள்). இவை அறிவின் அறைகூவல்கள். சிந்தனையின் சாகசங்கள். கற்பனையின் சுவடுகள். வாழ்வின் வசந்தங்கள். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிசைத் தூறல்கள் என்ற தொகுதி இந்த வசந்தத்தை எமக்கு வழங்குகின்றன. இதில் முப்பத்தாறு தூறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இஸ்லாம் மதத்தோடு தொடர்புடையதாய் சில தூறல்கள், இளமையின் துள்ளலாய் சில தூறல்கள், படிக்குந் தோறும் இதயத்தை இனிமையாக்கி குளிர்விக்கும் தூறல்கள் என இவை அமைந்துள்ளன.
பல இலக்கிய அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கும் எச்.எப். ரிஸ்னா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றவர். உள்நாட்டில் வெளிவந்த தொகுப்புக்களில் மட்டுமல்லாது இந்தியாவில் வெளிவந்த மழையில் கரைகிறது மானம் என்ற சிறுகதைத் தொகுப்பிலும் தனது கதையைப் பதித்தவர். அத்துடன் ஊடகத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு பணியாற்றி வருபவர். இவர், பல அமைப்புக்கள் மூலம் நடத்தப்பட்ட கவிதை, சிறுகதை, பாடல் போட்டிகளில் பங்குபற்றி பரிசும் பாராட்டும் தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரியும் ரிஸ்னா, இறைவனால் வழங்கப்பட்ட பொன்னான நேரத்தை நன்கு பயன்படுத்தியுள்ளார் என்பது அவரது இலக்கிய செயற்பாடுகளை நோக்கும் போது புரிந்துகொள்ள முடிகின்றது. வாழ்க்கையின் போராட்டத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் எம் மத்தியில், புதிய சிந்தனைகளைத் துளிர்விடச் செய்து மெல்லிசைத் தூறல்களை அகிலமெங்கும் பொழியச் செய்யும் ரிஸ்னாவின் முயற்சி பாராட்டுக்குரியது. கௌரவத்துக்குரியது'' என்று ரிஸ்னாவின் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
இசை என்ற கடலில் மூழ்கி முத்துக் குளிக்காதவர்கள் யாரும் இல்லை. இசை என்பது உள்ளங்களை ஈர்த்தெடுக்கும் ஒரு பலமான சக்தி. இசையுடன் கூடிய பாடல்கள் ரசனை உள்ளங்களை தன்பால் ஈர்த்துக்கொள்கின்றன. பாடல் வரிகளில் ஓசை நயமும், சந்தமும், எதுகை மோனையும் ஒரு சேர பயன்படுத்தப்படும்போது அது வாசிப்பதற்கும் இனிமையாக இருக்கின்றது. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் வாசிப்போரை வசீகரிக்கும் என்பது திண்ணம். இதில் காணப்படும் ஆன்மீகப் பாடல்களாக அன்பை அள்ளிப் பொழியும், இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே, மக்காவில் பிறந்த மாணிக்கமே போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே என்ற பாடல் நேத்ரா தொலைக் காட்சியில் ஜனாப் டோனி ஹஸன் அவர்களினால் இசையமைத்துப் பாடப்பட்டுள்ளது. அதேபோல மக்காவில் பிறந்த மாணிக்கமே என்ற பாடல் ஈழத்து இசை முரசு பாடகர் கலைக் கமல் அவர்களால் இசையமைத்து பாடப்பட்டு மண்வாசனையில் மகரந்தப் பூக்கள் இறுவட்டிலும் வெளிவந்துள்ளது.
நூலில் உள்ள பாடல்கள் பல்லவி, சரணம் 1, சரணம் 2 என்று வகுக்கப்பட்டு பாடல் எழுதுவதற்கான உரிய முறையில் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன.
முதலாவது பாடல் அன்பை அள்ளிப் பொழியும் இதயம் நிறைந்த அல்லாஹ்வே (பக்கம் 19) என்று இறைவன் பற்றிப் பாடியுள்ளார். இறைவனின் பேரருள் கிடைக்காவிட்டால் எமது வாழ்க்கையில் எந்தவித அர்த்தமும் கிடையாது. நாம் இம்மை வாழ்வில் செய்கின்ற நன்மைகள்தான் எமது மறுமை வாழ்வை அழகாக மாற்றுகின்றது. அதற்கு இறைவன் கற்றுத் தந்தவற்றை அணுவளவும் பிசகாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எமக்கு உணவு தந்து, உடை, தந்து, நல் பெற்றோரைத் தந்து எம்மை சமூகத்தில் சிறந்த ஒரு அந்தஸ்தில் வைத்திருக்கின்றான் என்றால் நாம் அவனுக்கு எவ்வளவு நன்றியுடையோராக இருக்க வேண்டும்? இத்தகைய இறைவன் பற்றிய இந்தப் பாடல் மனதுக்கு நிம்மதியளிக்கின்றது.
அன்பை அள்ளிப் பொழியும்
இதயம் நிறைந்த அல்லாஹ்வே
நீ வகுத்த வழிவகையில்
வாழ்வேனே என் வாழ்வை
காடு மலை நதிகளை
கண்குளிர்ச்சியாய் தந்தாயே
சுகந்தரும் தென்றலை
சுவாசிக்க வைத்தாயே...
வெண் பகலை இரவுக்குள்
வேறாக்கி வைத்தாயே
நீரினிலும் நிலத்தினிலும்
உயிர்களைப் படைத்தாயே
பாதைகள் புதிது என்ற பாடல் ஏழை - பணக்காரன் வாழ்வை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நடக்கும் ஜீவ மரணப் போராட்டம் பசி. இருப்பவனுக்கு ஒருநாள் என்பது சாதாரணம். இல்லாதவனுக்கு மூன்று வேளை உணவு கிடைக்குமா என்ற சதா ரணம். இருப்பவனுக்கு கேளிக்கையில் நாள் கழியும். இல்லாதவனுக்கு நம்பிக்கை மாத்திரமே மூலதனம். பாடல் வரிகள் தத்ரூபமாக அமைந்துள்ளமை பாராட்டுக்குரியது.
பாதைகள் புதிது
பயணங்கள் புதிது
பணக்காரப் பயலுக்கு
பசி கூட புதிது
வறுமைகள் கொடிது
வடிவங்கள் கொடிது
வறியவருக்கெல்லாம்
வயிறும்தான் கொடிது
இறைவனின் சந்நிதானத்தில்
இழிபுள்ளியா இந்த ஜீவன்கள்
எங்கே போய் அழிப்பது
ஏழைகள் என்ற நாமங்கள்
வீதி தனையே வீடு செய்து
வியக்க வைக்கும் கோலங்கள்
கடினப்பட்ட வாழ்க்கையினை
கடனாய் கொடுத்த காலங்கள்
மக்காவில் பிறந்த மாணிக்கமே (பக்கம் 24) என்ற பாடல் நபி பெருமானின் புகழ்பாடி நிற்கின்றது. அல்லாஹ் மிகவும் நேசிக்கும் மனிதப் புனிதரான நபியவர்கள் பற்றி நூலாசிரியர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
மக்காவில் பிறந்த
மாணிக்கமே எம் நபியே..
சொர்க்கத்துக் கனியே
சோபிதரே மஹ்மூதே...
துயர் போக்க பாரில்
தோன்றிய எம் ரசூலே..
உயிர் போன்ற இஸ்லாத்தை
உலகுக்கு தந்தவரே..
பாடலாசிரியர் ரிஸ்னா பெற்றோருக்கு சமர்ப்பணமாக தரணியில் நான் சிறப்பாய் வாழ்ந்திட (பக்கம் 26) என்ற பாடலை எழுதியிருக்கின்றார். ஒருவர் சிறந்தவராக மாறுவதும், தீயவராக ஆவதும் பெற்றோரின் கைகளில் தங்கியுள்ளது. பெற்றோர்கள் இன்றி வளரும் குழந்தைகள் தான்தோன்றித் தனமாகச் செயற்படுவது நாமறிந்த விடயம். அவ்வாறில்லாமல் பக்குவமாகவும், பாசமாகவும் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் வாய்க்கப் பெற்ற அனைவரும் பாக்கியசாலிகள் அத்தகைய பெற்றோருக்காக இவ்வாறான வரிகளால் பிரார்த்திக்கின்றார் நூலாசிரியர்.
கருவறை சுகந்தம் தரும் நிம்மதி
வாழ்க்கையில் இனிமேல் கிடைக்காது
என் முன்னேற்றத்தின் விடிவெள்ளிகளை
பார்ப்பேன் மனதை உடைக்காது
பறவையின் சிறகாக மாறி நானும்
தாய் தந்தையரை காப்பேனே
கடவுளிடம் கையேந்தியே நான்
கருணை காட்டும்படி கேட்பேனே
ஒருவனுக்கு நாட்டுப்பற்று இல்லாவிட்டால் அவன் வாழ்வதற்கே தகுதியற்றவன். தாயும் தாய் நாடும் இரு கண்கள் போன்றவை. தான் கொண்டுள்ள நாட்டுப் பற்று காரணமாக யுத்தம் நிகழ்ந்த இந்நாட்டைப் பார்த்து இந்த தேசம் நம் தேசம் (பக்கம் 77) என்ற பாடலை யாத்துள்ளார். இந்தப் பாடல் இன ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கின்றது. இதன் வரிகள் சில
குண்டுகள் வெடித்து சிதறியதில்
குற்றுயிர் எத்தனை மடிந்தது
சாதி மதம் பார்த்ததினால்
சாதனை என்ன நிகழ்ந்தது
ஒருதாய் வயிற்றுப் பிள்ளையென
ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்
உலகத்தை நம் உறவாக்கி
உயர்ச்சி பெற ஒன்றிணைவோம்
இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள ரசனை ததும்பும் காதல் பாடல்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன. அந்த வகையில் ஓ மேகமே ஓ மேகமே, பொன்மாலைப் பொழுதொன்றில், மாங்குருவி போல் வந்து, வானவில்லின் நிறங்கள், வானம் உடைந்து, வாலிபத் தென்றலாய் வந்து, பொல்லாத காதல் என்னை, கிளை விரித்த உன் நெஞ்சில், உயிருக்குள் நீ பாதி, தேன் ஊறும் உன் கன்னம், இதயம் இப்படி வலிக்கவில்லை, மழையில் நனைந்த சிறு புறாவாய், நிம்மதியான இந்த நிமிடங்களை, மார்புக்குள் ஒரு குடிசை செய்து, அன்பை எல்லாம், உன்னைப் பார்க்க ஓடி வந்தேன், எப்போது என் வெறுமையை, மருந்தெல்லாம் இனிக்குதடி, இந்த வாழ்க்கை, நான் தந்த மடலினை, பால்நிலா பொழியும் நேரம் ஆகிய பாடல்களைக் குறிப்பிடலாம்.
பொல்லாத காதல் என்னை (பக்கம் 44) என்ற பாடல் பிரிந்து போன காதல் பற்றி துயர் பாடுகின்றது. ஏகாந்த வெளியில் காதல் வலியைப் பாடும் ஒரு காட்சி இந்தப் பாடலை வாசிக்கும் போது ஏற்படுகின்றமை பாடலின் சிறப்பம்சமாகும். பாடலில் உள்ளடக்கட்ட விடயங்கள் அற்புதமாக காணப்படுகின்றன. ஓசை நயமும், வார்த்தை வீச்சும் புருவமுயர்த்தச் செய்கின்றன.
பொல்லாத காதல் என்னை
போர் செய்து கொல்லும்
நில்லாத காற்று எந்தன்
வாழ்க்கையைச் சொல்லும்
பூமழை தூவும் ராத்திரி நேரம்
உன் முகம் தோன்றும் கண்ணில்
அது என்றும் அகலாதிருந்து
என்னை கீறிச் செல்லும்
நீ தந்த காதல் எனக்கு
காயங்கள் கூட்டும்
என் கண்ணீர் தானே இனிமேல்
தாகங்கள் தீர்க்கும்
மார்புக்குள் ஒரு குடிசை செய்து (பக்கம் 69) என்ற பாடல் காதல் சுவையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பாடலில் வந்து விழுந்துள்ள சொற்கள் யாவும் ரசிக்கத்தக்கதாகவும், வியக்கத்தக்கதாகவும் அமைந்துள்ளன. ரசனையுடன் பாடக்கூடிய பாடலாக எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் சினிமாப் பாடல்களின் தரத்தில் மேலுயர்ந்து காணப்படுகின்றமை கூடுதல் சிறப்பு.
மார்புக்குள் ஒரு குடிசை செய்து
மயிலே உன்னுடன் வாழ்கிறேன்
கண்ணுக்குள் மூடி வைத்து
கண்மணியே உன்னை ஆள்கிறேன்
காதல் வழியும் கண்களைக் கொண்டு
கவிஞனாய் என்னை ஆக்கிவிட்டாய்
கனவாய் இருந்த எந்தன் திசையில்
கலங்கரை விளக்காய் ஆகிவிட்டாய்
பூமொழி கொண்டு வார்த்தைகள் செய்து
பூவே என்னிடம் பேசி விட்டாய்
எங்கோ அலைந்து தவித்திருந்த எனக்கு
நேச வலையினை வீசி விட்டாய்
ஆன்மீகம், தாய்மை, பெற்றோர் பாசம், பிரிவு, காதல் சுவை போன்ற உணர்வுகள் கலந்து செய்த ரசனை மிக்க பாடல்களை எழுதியிருக்கும் ரிஸ்னா எதிர்காலத்தில் இப்பாடல்களை இசை வடிவிலும் வாசகர்களுக்காக தர வேண்டும் என்றும் அவரது முயற்சிகள் யாவும் வெற்றியடைய வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்!!!
நூல் - மெல்லிசைத் தூறல்கள்
நூலின் வகை - பாடல்
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - கொடகே பதிப்பகம்
தொலைபேசி - 0775009222, 0719200580
மின்னஞ்சல் முகவரி - riznahalal@gmail.com
விலை - 300 ரூபாய்



