எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிதமாய் பேசும் கவினூறு கவிதைகள்
கே.எஸ். சிவகுமாரன்
பதுளை மாகாணத்தில், அந்நகரிலிருந்து சில மைல் தூரத்தில் தியத்தலாவை என்ற குளிர் பிரதேசம் இருக்கிறது. சிறுவயதில் எனது உறவினர் ஒருவர், அங்குள்ள நில அளவைப் பயிற்சியாளர்கள் முகாமில் தங்கியிருந்தார். பாடசாலை விடுமுறையில் என் பெற்றோர், தம்பிமார் சகிதம் நாம் அங்கு சென்றிருந்தோம். அந்த அனுபவம் அலாதியானது. தியத்தலாவையிலிருந்து திறமைசாலி இளம் எழுத்தாளர் ஒருவர் நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறார். பத்து நூல்களை இதுவரை தந்துள்ள அவர் பெயர் எச்.எப். ரிஸ்னா. இவருடைய முன்னைய நூலொன்றை நான் திறனாய்வு செய்தது நினைவிற்கு வந்தது.இவரது சமீபத்திய நூல், ஒரு கவிதை நூல். மழைப் பிரதேசமான அவ்விடத்திலிருந்து எழுதும் ரிஸ்னா "மழையில் நனையும் மனசு" என்ற தலைப்பில் அந்த நூல் வெளியாக்கியிருக்கிறார். "மழைக் குளிரில் தளிர் பறிக்கும் மலையக மாதருக்கு" சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்த அழகான நூலில் மொத்தம் 78 கவிதைகள் இடம் பெறுகின்றன.
இந்நூல் வெளியிடப்பட்டபோது அங்கு பேசிய அறிஞர்கள் இந்நூலின் சிறப்புகளை விதந்துரைத்தனர். அவை நூலாசிரியருக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். இவரது இக்கவிதைகளின் உள்ளடக்கம் தொடர்பாகவே பலரும் தமது கருத்துக்களை மையமாக வைத்துப் பேசினர். என்னைப் பொறுத்தமட்டில் உள்ளடக்கம் தொடர்பாக நம்மிடையே பலர் வியாக்கியானங்களைச் செய்ய இருக்கின்றனர். எனவே தான், உள்ளடக்கம் ஆசிரியரின் சொந்தப் பார்வையானதால், அதுபற்றி நான் தட்டிக் கேட்பதில்லை. நான் முதலில் ஒரு ரசிகன் மாத்திரமே. கண்டனம் செய்யும் விமர்சகன் அல்லன். மாறாக, படைப்பின் திறன்களை எனது ரசனையின் அடிப்படையில் சுட்டிக்காட்டுவதே எனது தொழிற்பாடு. அதன்படி ரிஸ்னாவின் கவிதைகளில் காணப்படும் புத்தாக்கங்களையும், கவித்துவம் நிரம்பிய வரிகளையும் வியந்து பாராட்டவே முயல்கின்றேன்.
கல்கிசையிலிருந்து வெளியாகும். "பூங்காவனம்" சிற்றேட்டினரின் இலக்கிய வட்டம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ 400/=. இதில் சில கவிதைகளுக்கு மனதைக் கவரும் சில சித்திரங்களும் இடம்பெற்றுள்ளது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன், நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், எம்.எஸ்.எம். ஜின்னா, வி. ஜீவகுமாரன் ஆகியோருடன் எச்.எப். ரிஸ்னாவும், இக்கவிதைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அழகாக விபரித்துள்ளனர். இவற்றை நான் மீண்டும் எடுத்துரைப்பதை விடுத்து, கவிதைகளில் காணப்படும் புதுமைப் பிரயோகங்களை மாத்திரம் இங்கு பதிவு செய்கிறேன்.
அதற்கு முன்னர், இவருடையதும், இவரின் ஊக்குவிப்பியாக இயங்கும் ரிம்ஸா முஹம்மத்தினதுமான இரு கவிதைகளை நான் ஆங்கிலத்தில் ஆக்கம் செய்துள்ளேன் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
ரிஸ்னாவின் நோக்கம்: அழகான கவிதையை எழுதிவிட நல்ல கற்பனை வளம் இருந்தால் போதும். ஆனால் ஆத்மார்த்தமான கவிதைகளை எழுதுவதற்கு நமதோ, நம்மைச் சார்ந்தவர்களின் வலிகளும் போராட்டங்களும் தான் பாடு பொருளாகின்றன. அழகியல், ஆத்மார்த்தம் ஆகிய இருவகை சார்ந்த கவிதைகள் இந்நூலில் உள்ளடங்கியிருக்கின்றன.
இனி, நான் ரசித்த வரிகளுள் சில:-
* மலைகள் பெயர்ந்து இடம்மாறி மண்சரிவாகி நின்றதம்மா
* அதிகாலை வந்து என் மனசில சங்கமமான பனித்துளிக்கு
* உள்ளத்தின் உறுத்தல்கள் என்ற கவிதை அழகிய காதற் கவிதை
* இரும்புருக்கி ஊற்றியது போல இதயத்தில் வலியெடுக்கிறது
* வாடிப்போன என் இளமையே
* நெருப்புக் கட்டைக்குள் ஓடிப் புகுந்து தீக்குளிக்கும் என் இளமை
* குளிர் பூசும் கால நிலை
* கலாய்த்த உறவுகள்
* கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி
* வார்த்தைகளால் கத்தி செய்து துன்புறுத்துபவன் இருக்கிறான்
* உன் வார்த்தைகளின் சுனாமியினால்
* இனமொன்றை துடைத்தழித்தால் அதற்குப் பெயர் வன்மம் தான்
* பூச்சரித்த அரிசி தின்று வயிற்றுளைவால் துடித்திருந்தோம்
* இதயத் தணலில் மேலெழும் சில நினைவுப் புகை என்னில் படிந்து கொள்கிறது
* கற்கண்டை சாப்பிட்டாற் போல காதல் சொற்கொண்டு நீ பேசுகையில் ஆனந்த அருவி வந்து பாய்கிறது என் உள்ளத்தில்
* என் ஞாபகப் புற்களில் அமர்ந்து கொண்ட பனித்துளியா அவன்
* இதயத்தின் கீதங்களை மொழிபெயர்ப்பு செய்த வீணையா அவன்
* என் மனசை மெதுவாய் கொத்தும் கோழிக் குஞ்சா அவன்
* அடை மழையில் வரைந்த ரங்கோலியாகத் தான் அது
* நேசத்தின் ஒலிகள்
* குளவி கொட்டிப்போன வேதனையின் சாயலிலும் பாலைவன மணலின் தாங்கவியலா கொதிப்பிலும் துயரங்களை தருவிக்கிறது இருதயம்
* ஐஸ்கிறீம் கூட வெந்நீராய் சுட்டது
* சிற்பமாய் நீ எனக்குள்
* காய்ந்திருந்த இதயத்தில் மழை தூறிப் போயிற்று
* உப்பு அதிகரித்த உணவுக்குள் உடனே நீர்விட்டு அருந்திய பாசம்
* நெருப்புக்கு நாமின்று விறகானோம்
* உன் மனமெனும் மீனை கௌவிக் கொள்வதற்காய் நதிக்கரை கொக்காக நானும்
* மரக்கொத்தியாய் நீ என்னை கொத்திவிட வேண்டும் என்பதற்காய் என் உள்ளத்தை வாழை மரமாய் ஆக்கியிருக்கின்றேன்
* உன் இறால் இதழை உடனே பத்திரப்படுத்து
எச்.எப். ரிஸ்னா கவிஞர் மாத்திரமல்லர். நல்ல திறனாய்வாளரும் கூட. மேலும் பல காத்திரமான தொகுதிகளை இலக்கிய உலகுக்கு இவர் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துக்கள்!!!
நூல் - மழையில் நனையும் மனசு
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் பதிப்பகம்
விலை - 400 ரூபாய்

No comments:
Post a Comment