தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா எழுதிய 'நட்சத்திரம்' சிறுவர் பாடல்கள் நூல் பற்றிய ஒரு விவரணப் பார்வை
ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், தியத்தலாவையைப் பிறப்பிடமாகக் கொண்ட எச்.எப். ரிஸ்னா ஈழத்து இலக்கிய முஸ்லிம் பெண் படைப்பாளிகளில் முன்னிலை வகிக்கின்ற ஒருவர். 2004 ஆம் ஆண்டு மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் 'காத்திருப்பு' என்ற கவிதையை எழுதியதன் மூலமாக இலக்கிய உலகுக்குள் பிரவேசித்தார்.
இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தடம் பதித்து கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள் மற்றும் மெல்லிசைப் பாடல்கள் என எழுதி இலக்கியத்தில் தனது இருப்பைக் காத்திரமாக்கிக் கொண்டு தொடர்ந்தும் எழுத்துத் துறையில் நிலைத்து நிற்பதோடு, ஏனையவர்களுக்கும் தன்னாலான உதவிகள் செய்து அதன் மூலம் மன நிறைவடைகின்றார்.
இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தடம் பதித்து கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள் மற்றும் மெல்லிசைப் பாடல்கள் என எழுதி இலக்கியத்தில் தனது இருப்பைக் காத்திரமாக்கிக் கொண்டு தொடர்ந்தும் எழுத்துத் துறையில் நிலைத்து நிற்பதோடு, ஏனையவர்களுக்கும் தன்னாலான உதவிகள் செய்து அதன் மூலம் மன நிறைவடைகின்றார்.
இலங்கையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் காலாண்டு கலை இலக்கிய சஞ்சிகையான 'பூங்காவனம்' இவரது பெயரை என்றைக்குமே சொல்லிக் கொண்டிருக்கும். படைப்பாளி வெலிகம ரிம்ஸா முஹம்மதுடன் இணைந்து உடன் பிறவா சகோதரிகளாக, உற்ற நண்பிகளாக வாழ்ந்து பூங்காவனம் உதவி ஆசிரியர் என்ற வரையறைக்குளிருந்து இவர் ஆற்றிய இலக்கியப் பணி மகத்தானது.
எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் இவர், தான் எதிர்கொண்ட பல்வேறு எழுத்துலக சவால்களை அன்பு, பொறுமை, சகிப்புத் தன்மை என்பவற்றால் வெற்றிகொண்ட ரிஸ்னா இலங்கை கல்வி அமைச்சின் பாட நூல் வெளியீட்டுப் பிரிவில் கணினி வடிவமைப்பாளராக பல வருடங்கள் பணிபுரிந்து, தனது இலக்கிய ஆற்றலின் மூலம் அதற்கு சிறப்பளித்தார்.
எச்.எப். ரிஸ்னா, இதுவரை 10 நூல்களை எழுதி, வெளியிட்டுள்ளார். இவற்றில் இன்னும் உன் குரல் கேட்கிறது, மெல்லிசைத் தூறல்கள் போன்ற நூல்கள், இவருக்கு நாடு தழுவிய ரீதியில் பெரும் வரவேற்பினையும் பிரபல்யத்தினையும் பெற்றுக் கொடுத்தது. இவர் எழுதிய பாடல்களில், நேயர் நெஞ்சங்களைக் கவர்ந்த, "மக்காவில் பிறந்த மாணிக்கமே எம் நபியே" என்ற பாடல் கலைக்கமல் அவர்களால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டமை இங்கு ஈண்று குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பல்வேறு இலக்கிய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் தற்போது சிறுவர் படைப்புகளிலும் தனது கவனத்தைச் செலுத்தி 'நட்சத்திரம்' என்ற சிறுவர் பாடல் நூலை எமக்குத் தந்துள்ளார் ரிஸ்னா. 15 பாடல்கள் அடங்கியிருக்கும் இந்நூல் கல்வி அமைச்சினால் பாடசாலை நூலகங்களுக்குப் பொருத்தமான நூல் என்ற தகுதிச் சான்றிதழையும் பெற்றுள்ளது. இது இவரது எழுத்துப் பணிக்குக் கிடைத்த அரச அங்கீகாரமாகும்.
குறிஞ்சி நிலா எனும் புனைப் பெயரிலும் ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளார் எச்.எப். ரிஸ்னா. தனது படைப்பாற்றலுக்காக இவருக்கு இதுவரை கிடைத்துள்ள விருதுகளாவன:-
• 2013 அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனம் - காவிய பிரதீப விருது (கவிச்சுடர் விருது)
• 2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண சாகித்திய விழா - ஆக்க இலக்கியவாதிக்கான எழுசுடர் விருது
• 2016 ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய கலை இலக்கிய ஆய்வகம் - எழுத்தாளருக்கான கௌரவ விருது
• 2018 பாணந்துறை இஸ்லாமிய பேரவை மற்றும் இலக்கிய வட்டம் - கலையொளி விருது
சிறுவர்களின் வாசிப்புத் திறன் விருத்தியை மேலோங்கச் செய்து, அவர்களது உள மகிழ்வினையும் அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இவர் எழுதியுள்ள இந்நூல் நிச்சயம் பலரது பாராட்டினைப் பெற்றுக் கொள்ளும் என்பது திண்ணம்.
அழகிய அட்டைப் படத்துடன் 28 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்நூலில் 15 பாடல்கள் உள்ளடக்கம் பெற்றிருக்கின்றன. இப்பாடல்கள் ஒவ்வொன்றும் சிறுவர் மனதைக் கவரும் நோக்கில் படைக்கப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் இந்நூல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூலுக்கான அணிந்துரை, பின்னட்டைக் குறிப்பு என்பவற்றை மாவனல்லையைச் சேர்ந்த கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் அவர்கள் வழங்கியுள்ளார்.
இனிப் பாடல்களின் விவரணத்தைப் பார்ப்போம்.
பக்கம் 09, பாடல் - 1
மழை பொழியுது
மழை பொழிகின்ற அழகு ஆறுகள் பெருகி ஓடுவதை காணுகின்ற ஆனந்தம் கார்முகில் பனிந்து நீர் கொட்டிட நீர் நிலைகள் அடைகின்ற நீர்ப்பெருக்கம் என இப்படியே இயற்கையின் அழகு அற்புதமாக சொல்லப்படுதில் சிறுவர்கள் நிச்சயம் இன்புறுவர், சந்தோஷமடைவர்.
மழை பொழியுது பொழியுது
கார்முகில் கொட்டுது கொட்டுது
மழை பொழியுது
கார்முகில் கொட்டுது
அருவிகள் வழிந்திட
ஆனந்தம் பெருகிட
மழை பொழியுது
கார்முகில் கொட்டுது
நீர் நிலை உயர்ந்திட
நிலங்கள் நனைந்திட
பக்கம் 12, பாடல் - 03
பழங்கள்
பழங்கள் உண்பதின் அவசியம் அதனால் பெறப்படுகின்ற ஊட்டச் சத்துக்கள், உடல் ஆரோக்கியத்திற்கு அவற்றின் பங்களிப்பு, கழுவி உண்ணுவதின் சிறப்பு என்பன இப்பாடலில் மிக அழகாக சித்தரித்துக் கூறப்பட்டுள்ளது.
பழங்கள் உண்ணும் பழக்கத்தை
பாலர் நாமும் பழகிடுவோம்
உடல் ஆரோக்கியம் பெற்றிடவே
உண்டுவ ருவோம் பழங்களையே
பழத்தில் உள்ள விற்றின்கள்
விரைவில் உடலில் சேர்ந்திடவே
மென்று உண்போம் பழங்களையே
மெல்ல உண்போம் பழங்களையே
பக்கம் 17, பாடல் - 06
காக்கையாரே
'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' என்ற சிறப்புமிகு பாடல் போல் தமிழ் இலக்கியத்தில் பல்வேறு பாடல்கள், கதைகளில் காகத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் காகத்தின் பங்களிப்பும், காத்திரமான அளவு இருப்பதைப் பலரும் நன்கு அறிவர். அந்தவகையில் எச்.எப். ரிஸ்னாவும் காகம் பற்றிப் பாடுகின்றார்.
காக்கையாரே காக்கையாரே
கருமை நிற காக்கையாரே
கடுமையாக யோசிக்கும்
காரணத்தை சொல்வாயோ?
தெருவோர கடைப் பக்கம்
ஆலமரம் நிற்கிறதே
அதோ பார் அதன் நிழலில்
பாட்டி வடை சுடுகின்றாள்
பக்கம் 27, பாடல் - 14
வயல்வெளி
உலகின் உணவு உற்பத்தித் தளமான வயல்வெளி பற்றியும் அதன் சிறப்புக்கள், மேன்மை பற்றியும் மிக அழகாக தனது பாடல் மூலம் எடுத்துரைத்துள்ளார் இந்த நூலாசிரியை.
ஆற்றங்கரை மேட்டினிலே
அழகழகாய் வயல்களம்மா
அதிகாலை வேளையிலே
அணியணியாய் தெரியுதம்மா
அன்னப் பறவை கூட்டங்கள் போல்
ஆனந்தமாக ஓடி வரும்
கன்னிப் பெண்கள் கூட்டத்திலே
கலர் கலராக ஆடையம்மா
நட்சத்திரம் என்ற இந்த நூலில் இடம் பெற்றுள்ள 15 பாடல்கள் மூலமாகவும் சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தி, அவர்களது கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பினை நல்குவதற்காக எச்.எப். ரிஸ்னா எடுத்துக் கொண்டுள்ள முற்சியில் அவர் வெற்றி கண்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
நூலின் பெயர் - நட்சத்திரம்
நூலாசிரியர் - எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 200 ரூபாய்
தொலைபேசி இல - 0775009222, 0719200580
நூல் விவரணம்:-
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்,
#கிண்ணியா - 07.

No comments:
Post a Comment